Saturday, October 30, 2004

பல்லவியும் சரணமும் - V

இன்னும் சில பழைய பாடல்களின் சரணங்கள் கீழே. பல்லவியையும், திரைப்படத்தையும் கண்டு பிடியுங்களேன்! விடைகள் நாளைய பதிவில், !!! தேவையிருந்தால் மட்டுமே! 'பழைய பாடல் Blogger புலிகள்' தான் பல உலவுகின்றனவே!

'kudigaaranin uLaRaLgaL' வலைப்பதிவுக்குச் சொந்தக்காரர் மற்றும் Icarus Prakash ஆகியோருக்கு இப்போட்டியில் கலந்து கொள்ள அனுமதி இல்லை :-))

1. வள்ளியென்றால் வேலவனோடு, மன்னவனே நான் என்றும் உன்னோடு!
2. உன் மனமெங்கும் தெருக்கூத்து பகல் வேஷம் ...
3. கன்னி உன்னை கண்டதாலோ, தன்னை எண்ணி ...
4. சிங்கத்தின் கால்கள் பழுது பட்டாலும் சீற்றம் குறைவதுண்டோ?
5. தேனிலூறிய மொழியில் மொழியில் மலரும் மலரும் பூ மலரும்!
6. ஈன்ற தாயை நான் கண்டதில்லை, எனது தெய்வம் வேறெங்கும் ...
7. நேற்றொரு தோற்றம் இன்றொரு மாற்றம் பார்த்தால் பார்வைக்கு ...
8. உனக்கேற்ற துணையாக எனை மாற்றவா, குல விளக்காக ...

என் பழைய நினைவுகளிலிருந்து சுரண்டி எடுத்துப் பதித்ததால், சொற்தவறுகள் இருக்கலாம்! மன்னிக்கவும், திருத்தவும்!

என்றென்றும் அன்புடன்
பாலா

அமெரிக்க இந்தியருக்கு $500,000 'மாமேதை' உதவித் தொகை!

ஹார்வர்ட் மருத்துவப் பள்ளியில் (Massachusetts) உயிரியல் துறையில் துணைப் பேராசிரியராகப் பணி மற்றும் ஆராய்ச்சி செய்து வரும் Dr.வம்ஷி மூதா இன்று அவரே நம்ப முடியாத அளவு புகழுக்குச் சொந்தக்காரர்! உலகப் பிரசித்தியும் பெற்று விட்டார்.

இந்த திடீர் புகழ் அவரைத் தேடி வருவதற்கு முன் அவர் மனித உடலில் உள்ள மைடோகாண்ட்ரியா (mitochondria) செல்களைப் பற்றிய ஆராய்ச்சியும், வம்சாவழி வகை நோய்களான நீரிழிவு கொலஸ்ட்ரால் உடல் பருமன் ஆகியவற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவமும் செய்ததோடு, மருத்துவக் கட்டுரைகள் பல எழுதி வெளியிட்டும் வந்திருக்கிறார். செப்-18-ஆம் தேதி டாக்டருக்கு வந்த தொலைபேசி அழைப்பு (விருது பற்றி!) அவரது வாழ்க்கையை புரட்டிப் போட்டு விட்டது!

ஒவ்வொரு வருடமும் வழங்கப்படும், 'மாமேதை விருது' என்று சொல்லப்படும், MacArthur Fellowship ஆன $500,000 பெறும் Dr.மூதாவிற்கு முன்னர், இந்திய வம்சா வழியினர் ஐந்து பேர் இவ்விருதை பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்க செய்தி! அதாவது, எழுத்தாளர்கள் வேத் மேத்தா, ரூத் ப்ரவேர் ஜப்வாலா, கவிஞர் AK ராமானுஜன், சரோத் கலைஞர் உஸ்தாத் அக்பர் அலி கான் மற்றும் பொருளாதார நிபுணர் செந்தில் முல்லைநாதன் ஆகியோர்.

இவ்விருதுக்குரியவரை தேர்ந்தெடுக்கும் குழுவில் இருப்பவர் மற்றும் அவரை பரிந்துரைத்தவர் பற்றிய விவரங்கள் ஒருபோதும் வெளியிடப்படுவதில்லை; பரிசுக்குரியவரை விண்ணப்பங்களை பரிசீலித்தோ, நேர்காணல் மூலமாகவோ தேர்வு செய்யும் வழக்கம் அறவே கிடையாது! பின் எப்படித் தான் ஒருவர் தேர்ந்தெடுக்கப் படுகிறார்? இவ்விருதை பெற ஒருவருக்கு வேண்டியதெல்லாம் ஒரு பிரமிக்கத்தக்க அசலான எண்ணம் மட்டுமே!! அதை ஈடேற்றும் நோக்கில் அப்படைப்பாளியின் செயல்களோ அல்லது அராய்ச்சிப்பணியோ சமூக நலன்/பயன் சார்ந்து அமைந்திருத்தல் அவசியம்.

Dr.மூதா தனது ஆராய்ச்சியில், முதன்முறையாக தகவல் தொழில்நுட்பம் மற்றும் நுண்கணிதம் ஆகியவற்றை பயன்படுத்தி, மைடோகாண்ட்ரியா-வில் உள்ள வம்சாவழி நோய்க்குக் காரணமான ஹெலிகல் சுற்றுக்களை (Helical Twists) கண்டறிவதற்கான ஒரு உத்தியை வெற்றிகரமாகக் கையாண்டிருக்கிறார். மேலும், ஒரு வகை மெடபாலிக் (Metabolic) நோய்க்குக் காரணமான மரபணுவும், TYPE-2 நீரிழிவு நோய் பற்றிய பல புதிய தகவல்களும் Dr.மூதாவின் அயராத உழைப்பினால், மருத்துவ உலகிற்குக் கிட்டிய முக்கியக் கண்டுபிடிப்புகளாகும்.

அவரது தந்தையாரான Dr.வெங்கட்ரமண ராவ், பணி நிமித்தம், அமெரிக்க மண்ணுக்கு பயணம் செய்தபோது மூதா அவர்கள் ஆறு மாதக் குழந்தை! பின்னர், மூதாவின் தந்தை, அவர் பெற்ற மக்களின் படிப்பு வாய்ப்பையும், எதிர்காலத்தையும் மனதில் கொண்டு, அமெரிக்காவிலேயே தங்கி விட முடிவு செய்து விட்டார். தெலுங்கரான Dr.மூதா நாலைந்து வருடங்களுக்கு ஒரு முறை ஆந்திர விஜயம் செய்வதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்! இவரும் (பல தென்னிந்தியர்களைப் போல்!) ஒரு இட்லி-சாம்பார் பிரியர்; இன்னும் திருமணமாகாத ஒரு மிகத் தகுதியுடைய 33 வயது இளைஞரும் கூட!!!

Tuesday, October 26, 2004

சிறு வயது சிந்தனைகள் - பகுதி IV

இந்து உயர்நிலைப் பள்ளியில் (ஆறாவது முதல் +2 வரை) பயின்ற காலத்தில் எனக்கு பாடம் கற்றுத் தந்த ஆசிரியர்களை இன்று எண்ணிப் பார்க்கும்போது, ஏன் குருவை தெய்வத்தினும் உயர்ந்த ஸ்தானத்தில் (மாதா, பிதா, குரு, தெய்வம்!) வைத்தார்கள் என்ற புரிதல் ஏற்படுகிறது! இந்நிலைக்கு நான் உயர அவர்களின் பங்களிப்பு அபரிமிதமானது. பள்ளியில் என் ஆசிரியர்கள் மெச்சிய மாணவனாகத் திகழ்ந்தேன் என்றால் அது மிகையாகாது. பள்ளி வாழ்க்கையில் எனக்கு வழங்கப்பட்ட பரிசுப் புத்தகங்கள், இரண்டு பெட்டிகள் நிறைய வீட்டில் இன்னும் இருக்கின்றன. என் நண்பர்களுக்கும் தெரிந்தவர்களுக்கும் உபயோகமாக இருந்த அப்புத்தகங்களை என் மகள்களும் படிப்பார்கள் என்றே நினைக்கிறேன்!

இந்த அளவிலாவது என்னால் தமிழில் எழுத முடிகிறதென்றால், அதற்கு காரணமாக இருந்தவர்கள், என் தமிழார்வத்திற்கு வித்திட்டு தமிழை சிறப்பாகக் கற்றுத் தந்த ஆசான்களான சீவை என்று அழைக்கப்பட்ட திரு.சீ.வைத்தியநாதன், திரு.பத்மநாபன், திரு.கோபால் சக்ரவர்த்தி, திரு.ஸ்ரீநிவாசன் ஆகியோரே. அதுவும், திரு.ஸ்ரீநிவாசன் அவர்கள் செய்யுட்களை ராகத்துடன் (சாரீரம் சற்று ஒத்துழைக்காவிட்டாலும் கூட!) பாடி, பொருள் விளக்கம் தந்ததை மறக்கத் தான் முடியுமா? பள்ளிக்காலங்களில் தமிழ் இலக்கணத்தின் பால் எனக்கு மிகுந்த காதல் இருந்தது எனலாம். SSLC இறுதித் தேர்வில்(1979)தமிழில் நல்ல மதிப்பெண்கள் பெற்றதற்காக 'கம்பர் கழகம்' பரிசாக வழங்கிய பதக்கத்தை இன்றும் பத்திரமாக வைத்திருக்கிறேன்.

1. ஓரு முறை ஆங்கிலப்பாட ஆசிரியர் திரு D.ராமானுஜம், கட்டுரைப் புத்தகம் எடுத்து வராத மாணவர்களை வகுப்பை விட்டு வெளியே செல்லுமாறு பணித்த மறு நிமிடம், அம்மாணவர்களில் நானும் ஒருவன் என்பதைப் பார்த்தவுடன், உத்தரவை திரும்பப் பெற்றுக் கொண்டு அனைவரையும் அமரச் சொன்னதும் (அதனால் சக மாணவர்கள் கடுப்பானதும்!)
2. மற்றொரு முறை, 11-ஆம் வகுப்பு வேதியியல் ஆசிரியர் TRR என்றழைக்கப்பட்ட T.R.ராஜகோபாலன், என்னுடன் பயின்ற அவரது மகனிடம் கேட்ட ஒரு வினாவுக்கு (Avogadro விதி என்ன?) விடை கூற அவனுக்கு உதவ முயன்றதற்காக, அவனை Avogadro விதியை 50 தடவையும், என்னை 100 தடவையும் எழுதுமாறு தண்டனை அளித்ததும், (அதை 'என் விதி' என்று நொந்தபடி, கையொடிய எழுதியதும்!)
3. மற்றொரு முறை, 9-ஆம் வகுப்பு அறிவியல் ஆசிரியர் திரு S.K.சேஷனிடம் அரையாண்டுத் தேர்வில் எனக்கு நியாயமாகக் கிடைக்க வேண்டிய அரை மதிப்பெண்ணை(!) போராடிப் பெற்றதும்,
4. +1 வகுப்பு படிக்கையில், உயிரியல் சோதனைக் கூடத்தில், மிகுந்த மன சங்கடத்துடனும், பாவம் செய்கிறேனோ என்ற அச்சத்துடனும் குளோரோஃவாம் மயக்கத்திலிருந்த என் முதல் தவளையை அறுத்ததும்,
5. 11-ஆம் வகுப்பு கணித ஆசிரியர் திரு M.சுப்ரமணியன், Calculus பாடத்தை மிக அற்புதமாக பயிற்றுவித்ததும்,
6. 8-ஆம் வகுப்பு தமிழய்யா திரு. பத்மநாபன் "துயரறு சுடரடி தொழுதெழு என் மனனே!" என்ற நம்மாழ்வரின் பாடல் வரிகளை 'ழ'கரம் வராத மாணவர்களை பல முறை உரைக்கச் சொன்னதும்,


என் நெஞ்சில் என்றும் வாழும் 'பசுமை நிறைந்த நினைவுகளே'!

சின்னக் காஞ்சிபுரத்தில் தெற்கு மாடவீதியில் அமைந்த எங்கள் பரம்பரை வீட்டில் நாங்கள் செலவிட்ட நாட்களை என்னால் மறக்கவே முடியாது! அந்த வீட்டை விற்றே, கிட்டத்தட்ட 20 ஆண்டுகள் ஓடி விட்டன. அதன் பிறகு நானும் காஞ்சிபுரம் சென்றதாக ஞாபகமில்லை! வீட்டை வாங்கியவர், அதை இடித்து விட்டு, பல குடியிருப்புகள் கட்டி, வாடகைக்கு விட்டு விட்டார் என்பது யாரோ சொன்ன செய்தி!

பள்ளிக் காலங்களில், வருட விடுமுறையின் பல நாட்களை, அத்தை தனித்து வாழ்ந்த அவ்வீட்டில், நாங்கள் ஆனந்தமாக ஆடி ஓடி விளையாடிக் கழித்ததும்,
காலை வேளையில் அத்தை தரும் பழையதும் (பழைய சோறு!) தொட்டுக் கொள்ள, சட்டியில் காய்ச்சிய பழங்குழம்பும் அமிர்தமாக இனித்ததும்,
அத்தை சினிமா விரும்பி என்பதால், அவர் கூட்டிச் சென்ற பெரிய காஞ்சிபுரக் கொட்டகைகளில் பல பழைய திரைப்படங்களைக் கண்டு களித்ததும் (ஒரு சமயம், புடைபுடைக்கிற மே மாத வெயிலில் ஜட்கா வண்டியில் சென்று ரஜனியின் 'தாய்வீடு' படம் பார்த்தது!),
வரதராஜப் பெருமாள் கோயிலில் இருக்கும் தங்க பல்லியை பார்ப்பதற்காகவே, ஒரு நாளில் பல தடவை கோயிலுக்குச் சென்றதும்,
காஞ்சியில் குளத்தினடியில் வாழ்பவரும், 40 ஆண்டுகளுக்கொரு முறை சிறிது காலம் கோயிலுள் எழுந்தருள்ளி பக்தகோடிகளுக்கு அருள் பாலிப்பவருமான அத்தி வரதப்பெருமானை, கிட்டத்தட்ட 25 வருடங்களுக்கு முன், குடும்பத்தோடு (அத்தையும் தான்!) பல மணி நேரம் வரிசையில் நின்று, தரிசனம் செய்ததும்


'நெஞ்சம் மறப்பதில்லை, அது நினைவை இழப்பதில்லை!' வகை ஞாபகங்களே!!!

இக்கட்டுரையை, என் 9-ஆம் வகுப்பு தமிழ்ப்பாடத்தில் இடம் பெற்ற, நேற்று தான் படித்தது போல் என் ஞாபகத்தில் பளிச்சென்று வீற்றிருக்கும் கம்ப ராமாயணச் செய்யுளுடன், நிறைவு செய்கிறேன்!

சூடையின் மணி என் கண்மணி ஒப்பது, தொன்னாள்
ஆடையின் கண்ணிருந்தது பேரடையாளம்!
நாடி வந்தென தின்னுயிர் நல்கிய நம்பா!
கோடி என்று கொடுத்தனள் மெய்ப்புகழ் கொண்டாள்..


என்றென்றும் அன்புடன்
பாலா


Friday, October 22, 2004

24-oct விகடனில் 'கற்றதும் பெற்றதும்'

சுஜாதா அவர்களின் 'கற்றதும் பெற்றதும்' தொடர் கட்டுரைகளைப் படிக்கும்போது, அறிவுபூர்வமான மற்றும் சுவையான பல விஷயங்களை எளிதாக தெரிந்து கொள்ள முடிகிறது. திரு.சுஜாதாவுக்கு வயதானாலும் கூட, அவர் இளமையாக சிந்திப்பதனால் தான், அவரது எழுத்தில் நகைச்சுவை உணர்வு இன்றும் மிளிர்கிறது! சென்ற வார ஆனந்த விகடனில், அவரது கட்டுரையில், பல இடங்களில் இதைப் பார்க்க முடிகிறது. உதாரணங்களாக, சிலவற்றை எடுத்து தந்திருக்கிறேன்.

1. அவர் சென்றிருந்த அனஸ்தீஸியா பற்றிய விளக்கக் கூட்டத்தில், தனக்கு 'மயக்க மருந்துகளைப் பற்றிய தெளிவும் விழிப்புணர்வும் கிடைத்தது' என்கிறார்! கூறி விட்டு, 'எப்படி சிலேடை?' என வினவுகிறார். நான் என்னவோ இத்தனை காலம், " பெருங்காயம், பருகாத-தேன், என்-பேனா, மறுப்போர்" வகைப்பட்ட சொற்கள் மட்டுமே சிலேடை என எண்ணியிருந்தேன்!

2. அடுத்து, லேட்டஸ்ட்டாக வந்திருக்கிற PROPOFOL எடுத்துக் கொள்ளும்போது (அறுவை சிகிச்சையின் போது தான்!) நமக்கு " 'அய்யோ மிய்யோ' இருக்காதாம்" என்கிறார்! 'அய்யோ மிய்யோ' என்றால் என்ன என்பதை திரு.சுஜாதாவிடம் திரு.தேசிகன் கேட்டுக் கூறினால், அவருக்கு புண்ணியமாகப் போகும்!

3. ANAESTHETIST-ஐ 'மயக்குநர்' என்கிறார்! அதாவது, ஒரு ஆபரேஷனுக்கு, மருத்துவரும் தேவை, மயக்குநரும் அவசியம்.

4. தான் சென்றிருந்த ஒரு கிறித்துவக் குடமுழுக்கு விழாவை, "பிதா சுதன் பரிசுத்த ஆவியின் துணை புதிய பிறவிக்கு எப்போதும் இருக்க வேண்டும் என்று 'ஆஸ்ஸீர்வதிக்கும்' விழா" என்று கூறுகிறார்! Subtle Humour!

5. எளிமையான தமிழ்ச் செய்யுட்களுக்குக் கூட அர்த்தம் புரியாதோரை, 'SMS தமிழர்கள்' என்கிறார்!

6. எல்லாவற்றிற்கும் சிகரம் வைத்தது போல் அமைந்தது,

"உலகம் யாவையும் தாமுளவாக்கலும்
நிலை பெறுத்தலும், நீக்கலும், நீங்கலா
அலகிலா விளையாட்டுடையார் அவர்
தலைவர் அன்னவர்க்கே சரணாங்களே!"

என்ற கம்பரின் கடவுள் வாழ்த்துப் பாடலுக்கு அவர் வழங்கும் 'சென்னைத்தமிழ்' பொழிப்புரையான
"நாமெல்லாம் பொறக்க சொல்ல படச்சு காப்பாத்தி சாவடிக்கிறார் பாரு தல, அவுரு கால்ல உயு வாத்யாரே" என்பது தான்!!!
Deadly Translation Sir!

அவரே ஒரு கட்டுரையில் எழுதியது போல 'இன்னுமொரு நூற்றாண்டிரும்' என்று அவரை வாழ்த்தி வணங்குகிறேன்.

என்றென்றும் அன்புடன்
பாலா

Tuesday, October 19, 2004

பல்லவியும் சரணமும் - IV

இன்னும் சில பழைய பாடல்களின் சரணங்கள் கீழே. பல்லவியையும், திரைப்படத்தையும் கண்டு பிடியுங்களேன்! விடைகள் நாளைய பதிவில், !!! தேவையிருந்தால் மட்டுமே! 'பழைய பாடல் Blogger புலிகள்' தான் பல உலவுகின்றனவே!

1. சங்கீதத் தென்றலிலே சதிராடும் பூங்கொடியே, சந்தோஷம் காண ..
2. குறுநகையின் வண்ணத்தில் குழி விழுந்த கன்னத்தில் ...
3. இந்த காதல் ஓவியத்தின் பாதை மாறியது காலம் செய்து விட்ட மாயமோ?
4. குடந்தையில் பாயும் காவிரி நதி தான் ...
5. மின்னல் உருமாறி மண் மேலே, கன்னியைப் போலே, எந்தன் முன் ...
6. இந்த தேவி மேனி மஞ்சள், நான் தேடியாடும் ஊஞ்சல்!

என் பழைய நினைவுகளிலிருந்து சுரண்டி எடுத்துப் பதித்ததால், சொற்தவறுகள் இருக்கலாம்!
மன்னிக்கவும், திருத்தவும்!

என்றென்றும் அன்புடன்
பாலா

Sunday, October 17, 2004

சிறு வயது சிந்தனைகள் - பகுதி III

ன் சிறுவயதில் நாங்கள் (அம்மா, அக்கா, தம்பி, தாய்வழிப் பாட்டி, தாத்தா) வாழ்ந்தது, திருவல்லிக்கேணியின் பழைய வீடுகளுக்கே உரித்தான அமைப்பு (அகலவாக்கில் சுமார் 14 அடி, நீநீ... நீளவாக்கில் சுமார் 120 அடி!) கொண்ட ஒரு வீட்டில், ஒண்டுக் குடித்தனத்தில் தான். அவ்வீட்டில் எங்களோடு சேர்த்து நான்கு குடும்பங்கள் இருந்தன. அனைவரின் சமையலறைகளும் வீட்டின் தரைப்பகுதியிலும், கூடம் மற்றும் படுக்கை அறைகள் மாடியிலும் அமைந்த ஒரு வித்தியாசமான வீடு அது! உண்பது கீழே! உறங்குவது மேலே (வானொலியில் ஒலிச்சித்திரத்தை கேட்ட பின்னர்)! இரவு வேளைகளில் (9 மணிக்கு மேல்) வீட்டின் கீழ்ப்பகுதியில் பொதுவாக ஒருவரும் இருக்க மாட்டார்கள் என்பதால், சமையலறைகளுக்கு அப்பால், வீட்டின் பின்கோடியில் அமைந்த கழிவறைகளுக்கு, மாடியிலிருந்து இறங்கி, இருட்டில் செல்ல சிறியவர்களுக்கு மிகுந்த தைரியம் தேவைப்பட்டது!!! அந்த இக்கட்டான நேரங்களில், துணிவை வரவழைத்துக் கொள்ள ஒரு MGR பாடலையோ அல்லது ஆஞ்சநேயர் ஸ்லோகத்தையோ முணுமுணுத்துக் கொண்டே செல்வது என் பழக்கம்!

அக்கால கட்டத்தில்,எங்களது தூரத்து உறவினர் ஒருவர் என் குடும்பத்திற்கு நிறைய உதவிகள் செய்து வந்தார். தந்தையில்லாக் குழந்தைகள் என்று எங்களிடம் மிகுந்த அன்பு செலுத்தினார். அவரை, 'பஜணா' மாமா என்ற 'காரணப்பெயர்' கொண்டழைப்போம்! மாமா அவரது 6-வது வயதில் திருவல்லிக்கேணி வழியாக நடைப்பயணமாக திருமழிசை சென்று கொண்டிருந்த ஒரு பஜணை கோஷ்டியின் பின்னே, கான மயக்கத்தில் சென்று விட்டாராம்! பின்னர், ஒரு பெரிய தேடலுக்குப் பின் மீட்கப்பட்டு, வீடு வந்து சேர்ந்தாராம்! (இதெல்லாம் மாமாவின் தாயார் கூறியது)

அவர் எங்களுக்கு படிப்பு சொல்லித் தருவார். எங்களை திரைப்படம், சர்க்க்ஸ் (ஜெமினி!), மெரீனா கடற்கரை, தீவுத்திடலில் நடக்கும் பொருட்காட்சிகளுக்கு கூட்டிச் செல்வார். மாதம் ஒரு ஞாயிற்றுக்கிழமை, 'ரத்னா கபே' உணவகத்திலிருந்து, காலை சிற்றுண்டி (இன்றும் இட்லி, வடை, முக்கியமாக சாம்பார் அவ்விடத்தில் மிக பிரசித்தம்! சிலர் சாம்பாரை குடிக்கவே செய்வார்கள்!) என்னை வாங்கி வரச் சொல்லி, எங்களோடு சேர்ந்துண்பார். தந்தையார் உயிரோடு இருந்திருந்தால் கூட, அவர் அளவுக்கு இருந்திருப்பாரா என்று எங்களை சில தருணங்களில் எண்ணிப் பார்க்க வைத்திருக்கிறார்! நான் பள்ளியில் பல பரிசுகளை வென்றபோதும், எனக்கு பொறியியல் கல்லூரியில் இடம் கிடைத்தபோதும், அவர் மிக்க மகிழ்ச்சி அடைந்தார்.

கதை கூறுவதில் அவரிடம் ஒரு அசாத்திய திறமை இருந்தது. குறிப்பாக, பல விக்ரமாதித்தன் மற்றும் மஹாபாரதக் கதைகளை மிக அழகாக விவரிப்பார். அவர் தனது நண்பர்களுடன் பார்த்து ரசித்த ஒரு திரைப்படக்கதையை, அப்படத்தின் திரைக்கதாசிரியரையே மிஞ்சும் வகையில், எங்கள் கவனம் சிறிதும் சிதறா வண்ணம், கிட்டத்தட்ட 2 மணி நேரம் கோர்வையாக எடுத்துரைப்பதில் அவருக்கு நிகர் அவரே! ஐந்தாறு வருடங்களுக்கு முன்னர், அவருக்கு என் குடும்பத்தில் உள்ள ஒருவரிடம் ஏற்பட்ட சிறு மனத்தாங்கல் காரணமாக, உறவில் விரிசல் ஏற்பட்டு, தற்போது எங்களிடையே அதிக பேச்சு வார்த்தை இல்லாவிட்டாலும் கூட, அவரை நன்றியோடு நினைத்துப் பார்க்கிறேன்.

பிறருக்கு உதவும் மனப்பான்மை என்னிடம் இருப்பதற்கு அவரும் ஒரு காரணம். செஸ், டிரேட் (Monopoly) மற்றும் சீட்டில் சில ஆட்டங்களை எனக்கு அறிமுகப்படுத்தியவர் அவரே. பின்னாளில் செஸ் அறிவை கூர் தீட்டிக் கொண்டு, GCT-யில் படித்த 4 ஆண்டுகளிலும் கல்லூரி சாம்பியனாகத் திகழ்ந்தேன். 'Literature', 'Patience'(Solitaire போன்றது) மற்றும் 'Trump' போன்ற சீட்டாடங்கள் நிறைய ஆடியிருக்கிறோம். அதிலும் 'லிடரேச்சர்' நமது ஞாபக சக்திக்கு வேலை தரும் அருமையான விளையாட்டு. 4 அல்லது 6 பேர் எதிராடலாம்.

இந்த ஆட்டத்தின் நோக்கம், பலரிடம் பிரிந்திருக்கும் ஒரு ஜாதியை சேர்ந்த சீட்டுக்களை ஒருவர் சேகரித்து, SET சேர்க்க வேண்டும். அதாவது, ஒவ்வொரு ஜாதியிலும் A K Q J 10 9 - சீட்டுக்கள் ஒரு SET; 2 3 4 5 6 7 8 - சீட்டுக்கள் ஒரு SET! மொத்த சீட்டுக்களை குலுக்கி ஆட்டக்காரர்களுக்கு பகிர்ந்தளத்த பின், எவரிடம் A Spade உள்ளதோ, அவர் ஆட்டத்தைத் தொடங்கி, சக ஆட்டக்காரர் ஒருவரிடம் தனக்கு வேண்டிய சீட்டு உள்ளதா என வினவுவார். இருந்தால் அதைப் பெற்றுக் கொண்டு, சீட்டை இழந்தவரிடமோ அல்லது மற்றொரு ஆட்டக்காரரிடமோ தனக்கு வேண்டிய அடுத்த சீட்டைக் கேட்டு ஆட்டத்தைத் தொடருவார். அவர் கேட்ட சீட்டு இல்லாத பட்சத்தில், கேட்கப்பட்ட நபர், சீட்டை விளித்து வாங்கும் உரிமை பெற்று, ஆட்டத்தைத் தொடருவார். இதில், சுவாரசியமான விஷயம் ஒன்று உண்டு! ஒருவர், மிகவும் போராடி, ஒரு SET-இல் ஒரு சீட்டைத் தவிர மற்றதை கையகப்படுத்தியிருக்கும் நிலையில், அந்த ஒற்றைச் சீட்டுக்கு சொந்தக்காரர், மற்றனைத்தையும், அவரிடமிருந்து விளித்துப் பிடுங்கி, அழகாக SET சேர்த்து விடுவார்!!!

இக்கட்டுரையை, திருவல்லிக்கேணியில் வாலாஜா சாலையில் அமைந்திருந்த பாரகன் (Paragon தற்போது இடிக்கப்பட்டு அங்கே வானளாவிய அடுக்கு மாடிக் கட்டிடம் தோன்றி விட்டது!) தியேட்டரில் நான் பலமுறை கண்டு களித்த 'இராஜ ராஜ சோழன்' திரைப்படத்தில் சிவாஜி கணேசன் பாடும், என் ஞாபகத்தில் இன்றும் சிறகடிக்கும், வசன பாடல் வரிகளோடு நிறைவு செய்கிறேன்.

தென்றலோடு உடன் பிறந்தாள் செந்தமிழ் பெண்ணாள்!
அவள் தென்மதுரைக் கோயிலிலே சங்கம் வளர்த்தாள்!
தஞ்சையிலே குடி புகுந்து மங்கலம் தந்தாள்! அவள்,
தரணியெலாம் புகழ் பரப்பும் தாயென வந்தாள்,தமிழ்த் தாயென வந்தாள்!

என்றென்றும் அன்புடன்
பாலா

Friday, October 15, 2004

நமது டெஸ்ட் கிரிக்கெட் அணி - ஒரு கண்ணோட்டம்

நமது கிரிக்கெட் அணியின் (சச்சின் இல்லாத) நிலமை, அதுவும் ஆஸ்திரேலியா உடனான முதல் டெஸ்ட் ஆட்டத்தில் தோல்வி அடைந்த நிலையில், மிகவும் கவலைக்கிடமாகவே உள்ளது. இதற்கு முன்னால் நடந்த ஆசியக் கோப்பை, Videocon Cup, Natwest Challenge மற்றும் ICC champions Trophy தொடர்களிலும், நமது வெற்றி சதவிகிதமும் குறைவே, அதாவது 39%.

அப்படியிருந்தும், அதே அணியே திரும்ப திரும்ப களமிறங்கி, தோற்று நம்மை வெறுப்பேற்றுவது வாடிக்கையாகி விட்டது! அணி வீரர்களுக்கென்ன, தோற்றாலும் ஜெயித்தாலும், அதிகமாகவே 'துட்டு' கிடைத்து விடுகிறது! ரசிகர்களாகிய நாம் தான், நேரத்தையும், பணத்தையும், சக்தியையும் விரயம் செய்து கொண்டிருக்கிறோம்! நாம் அவர்கள் மீதுள்ள நம்பிக்கையை என்றும் இழப்பதே இல்லை!!!
இப்போது கூட பாருங்கள், நேற்று கும்ப்ளே 7 விக்கெட்டுக்களை வீழ்த்தியதால், இன்று சேவாக் 150+ ரன்கள் குவித்ததால், நமது வெற்றிக் கனவு இன்று துளிர்த்து நாளை விருட்சமாகி விடும் !!! நாம் திருந்துவது கடினமே. இந்த ஆட்டத்தில் நாம் வென்றாலும், அதற்கு கும்ப்ளேவும் சேவாக்-கும் மட்டுமே காரணமாக இருக்க முடியும். TEAM EFFORT என்று கூற இயலாது. தற்போதுள்ள அணியில் மாற்றங்கள் அவசியம் எனத் தோன்றுகிறது.

முக்கியமாக, சமீபத்து தொடர் தோல்விகளுக்கு, கங்குலி பொறுப்பேற்று, captain பதவியிலிருந்து விலகுவது தான் அவருக்கு அழகு. அணியில் உள்ள சில ஆட்டகாரர்களிடத்தில் கங்குலிக்கு இருக்கும் நம்பிக்கையும் விசுவாசமும், வரைமுறை தாண்டி போய் விட்டது. லஷ்மண் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக கொல்கத்தாவில் அடித்த 281-க்கு பிறகு உருப்படியாக எதுவும் செய்ததாக நினைவில்லை!

கங்குலிக்கு பிடித்த யுவரஜிடம் எவ்வளவு திறமை உள்ளதோ, அதை விட ஆணவம் அதிகம். யுவராஜ் தன்னை மட்டை அடிப்பதில் விவியன் ரிச்சர்ட்ஸ் என்றும், பந்து தடுப்பதில் ஜான்டி ரோட்ஸ் என்றும் நினைத்துக் கொண்டிருக்கிறார்!? நினைப்பு தான் பிழைப்பை கெடுக்கிறது! ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்டில் இரண்டு இன்னிங்க்ஸிலும், நமது அணி இருந்த நெருக்கடியான நிலமையை சற்றும் உணராமல், ஒரே
மாதிரியான இரு மோசமான ஷாட்டுகளுக்கு தனது விக்கெட்டை இழந்தார்.

யுவராஜை துவக்க ஆட்டக்காரர் ஆக்கியே தீருவேன் என்று அடம் பிடித்த கங்குலியின் அடாவடித்தனம் கண்டிக்கப்பட வேண்டிய ஒன்று. இதனால் சோப்ராவின் தன்னம்பிக்கை தரை மட்டமானது தான் மிச்சம்! ஆஸ்திரேலிய குதி-வேகக் (bouncy and fast!) களங்களிலேயே அருமையாக ஆடிய அவர், இப்போது பெங்களூரின் தட்டையான
களத்திலேயே சொதப்பினார்.

இதை விட அக்கிரமமான விஷயம் ஒன்று உண்டென்றால், அது, முதல் டெஸ்டில் 2-வது இன்னிங்க்ஸில் உயிரை கையில் பிடித்துக் கொண்டு ஆடி ஆட்டத்தை எப்படியாவது 'டிரா' செய்ய வேண்டிய சூழ்நிலையில் நாம் இருந்தபோது, கங்குலி இல்லாத ரன்னுக்கு முட்டாள்தனமாக ஓடி, ரன்அவுட் ஆனது தான்! கங்குலியை டெஸ்ட் அணியிலிருந்து நீக்கி விட்டு, திராவிட்டை கேப்டன் ஆக்கினால் தான், நமக்கு விடிவு காலம் பிறக்கும் (சென்னை டெஸ்டில் இந்தியா வென்றாலும் கூட!).

அத்துடன் நில்லாமல், அணிக்கும் சற்று புது ரத்தம் பாய்ச்சுதல் நலம். அதற்கு, யுவராஜ், லஷ்மண், பார்த்திவ் படேல் போன்றோரை சிறிது காலம் அணியிலிருந்து விலக்கி வைக்கலாம். அவர்களுக்கு பதிலாக வரப்போகிறவர்கள் அவர்களை விட மோசமாக விளையாடுவதற்கான சாத்தியங்கள் மிகக் குறைவே! அணிக்கு பலம் சேர்க்க மொஹமத் கெய்·வ், தினேஷ் கார்த்திக், ஹேமங்க் பதானி மற்றும் பல இளம் வீரர்கள் தயாராகவே உள்ளனர். நமது ஜாம்பவான் தெண்டுல்கரும் விரைவில் அணியில் சேர்ந்து விட்டால் நல்லது.

Thursday, October 14, 2004

அம்மாவின் 'HARD TALK' --- மற்றொரு கோணத்தில்!

பத்ரி, தனது வலைப்பதிவில் முதலமைச்சர் ஜெயலலிதாவின் நேர்காணல் ('Hard Talk' with Karan Thapar in BBC) பற்றிய தனது 'எண்ணங்களை' சுவாரசியமாக வெளியிட்டிருந்தார்! அதைப் படித்தபோது, சரிந்திருக்கும் தனது செல்வாக்கை தூக்கி நிறுத்த, அந்த நேர்காணலை 'அம்மா' சரியாக பயன்படுத்தத் தவறி விட்டாரோ எனத் தோன்றியது.

ஆனாலும், எனக்கென்னவோ நேர்காணலின் தொடக்கத்திலிருந்தே, கரண் தபார் சற்று அதிக 'aggressive' ஆக தன்னை நிலை நிறுத்திக் கொள்ள முயன்றதாகவே தோன்றியது. ஒரு தேர்ந்த அனுபவமிக்க பத்திரிகையாளர், தனது STYLE-ஐ நேர்காணல் செய்யப்படும் நபரை பொறுத்து, மாற்றியமைத்து செயல்பட்டிருக்கலாமோ என்ற எண்ணமும் எழுந்தது. உதாரணத்துக்குச் சில:

1. 'Humiliating Defeat' என்ற சொல்லாக்கத்திற்கு பதிலாக 'Huge Defeat' என்பது, நேற்காணலை சுமுகமாகத் தொடங்க பெரிதும் உதவியிருக்கலாம்.
2. அதே போல், தபாரின் 'You are reading a statement' சற்று அனாவசியமாகவே தோன்றியது. படிக்க வந்ததை சற்று படிக்க விட்டு, பின்னர் குறுக்கிட்டிருக்கலாம்! இவ்வளவு அவசரம் காட்டியிருக்கத் தேவையில்லை!
3. அடுத்து, "So was it revenge? It was vengeance?" என்ற தபாரின் கேள்வி மிக அதிகம்!!! எந்த ஒரு அரசியல்வாதியும் இத்தகைய வினாவுக்கு 'ஆமாம்' என கூறப்போவதில்லை! ஆத்திரமூட்டுவதைத் தவிர வேறெந்த நோக்கமும் இத்தகைய கேள்வியில் இல்லை எனலாம்.
4. தபார் தனது ஒவ்வொரு கூற்றையும்/வினாவையும் "The Press says", "The press depict" போன்ற ஒட்டுதலோடு வெளிப்படுத்தியது சரியாகப் படவில்லை. பத்திரிகைத்துறை பாராட்ட வேண்டும் என்பதற்காகவே ஒரு அரசாங்கத்தை நடத்த இயலாது! தற்போதுள்ள சூழலில், கட்சி சார்ந்த பத்திரிகையாளர்கள் பலர் உள்ளனர் என்பதே நிஜம்! You are confident that you can reach out to the people above the press and convince them of the real Jayalalitha? என்று தபார் கேட்டதற்கு, பத்திரிகைகளை படித்து விட்டு, அதன்படி மக்கள் ஓட்டு போடுகிறார்கள் என்பதை ஓரு நகைச்சுவையான கருத்தாகத் தான் கொள்ளலாம்!!!
5. அடுத்து தபாரின் "Are you embarrassed by your belief in Numerology and Astrology?" என்ற வினாவும் தேவையற்ற ஒன்று. அவற்றை நம்புவதும் நம்பாததும் ஒருவரின் தனிப்பட்ட உரிமை என விட்டிருக்கலாம். அக்கேள்வியின் தொடர்ச்சியாக, தமிழக மக்கள் அனைவரும் "Numerology" மேல் நம்பிக்கை உள்ளவர்களாக மாறி விடக்கூடிய சாத்தியம் இருப்பது போல் ஒரு வினாவெழுப்பினார்!(As Chief Minister of Tamil Nadu, you set an example ...) Too Much!


அதற்காக தமிழக முதல்வரும், நேர்காணலில் பல கேள்விகளுக்கு சிறப்பாக பதிலுரைத்தார் என்றும் கூற முடியவில்லை :-(( மேற்கூறியவைகளை வைத்து நான் 'அம்மா' அபிமானி என்று முத்திரை குத்தி விடாதீர்கள்! நான் எப்போதும் என் வீட்டம்மாவின் அபிமானி மட்டுமே :-))

என்றென்றும் அன்புடன்
பாலா

பல்லவியும் சரணமும் - III

இன்னும் சில பழைய பாடல்களின் சரணங்கள் கீழே. பல்லவியையும், திரைப்படத்தையும் கண்டு பிடியுங்களேன்! விடைகள் நாளைய பதிவில்!!!

1. முதிராத காதல் கனியும் இன்னும் முற்றாத கன்னி நகையும், அத்தான் என்றழைக்கும் அழகும்
2. கலைமாது தான் மீட்டும் இதமான வீணை, கனிவான ஸ்வரம் பாட பதமானது!
3. தெய்வம் என்றால் அது தெய்வம், சிலை என்றால் அது சிலை தான்!
4. காதல் ஒரு கீதம், அதைக் கண்டேன் ஓரிடம், போனாள் அவள் போனாள் நான் பார்த்தேன் நூறிடம்!
5. தேனோடு பால் தரும் செவ்விளநீர்களை ஓரிரு வாழைகள் தாங்கும்!
6. குரங்குகள் போலே மரங்களின் மேலே தாவித் திரிந்தோமே!
7. அது அல்லவோ பருகாத தேன், அதை இன்னும் நீ பருகாததேன்?
8. இளங்காற்று தீண்டாத மலரில்லையே, கிளி வந்து கொத்தாத கனியில்லையே!
9. தேக சுகத்தில் கவனம், காற்று வெளியில் பயணம், கங்கை நதிக்கு ...
10. பொன்மலர் கண்களில் அஞ்சனம் தீட்டி, பூவையின் அண்ணன் கைவளை பூட்டி! தாய் வழியே வந்த ...


என் பழைய நினைவுகளிலிருந்து சுரண்டி எடுத்துப் பதித்ததால், சொற்தவறுகள் இருக்கலாம்!
மன்னிக்கவும், திருத்தவும்!

என்றென்றும் அன்புடன்
பாலா

Wednesday, October 13, 2004

பல்லவியும் சரணமும் - II

இன்னும் சில பழைய பாடல்களின் சரணங்கள் கீழே. பல்லவியையும், திரைப்படத்தையும் கண்டு பிடியுங்களேன்!

1. சொந்தம் இருளிலா? ஒரு பூவையின் அருளிலா?
2. வானுலாவும் மஞ்சள் மேகம் மழை சேர்க்குமா? இங்கே உன்னை கண்டேன், நல்ல நேரமே!
3. நாயகன் நினைவே நாயகி என்னும் காவியம் சொல்லி கழுத்தினில் மின்னும்,
4. என் மகராணி மலர்மேனி செம்மாங்கனி என மடி மீது குடியேறி முத்தாடவா?
5. பூவென்று முள்ளைக் கண்டு புரியாமல் நின்றேன் அன்று, கால் கொண்டு ஆடும் பிள்ளை
6. கண்ணில் ஆடும் மாங்கனி கையில் ஆடுமோ?
7. கார்காலம் என விரிந்த கூந்தல் கன்னத்தின் மீதே கோலமிட!

என் பழைய நினைவுகளிலிருந்து சிலவற்றை அவசரமாக பிய்த்து பதித்துள்ளேன். சொற்தவறுகள் இருந்தால் மன்னிக்கவும், திருத்தவும்!
என்றென்றும் அன்புடன்

பாலா

Tuesday, October 12, 2004

பல்லவியும் சரணமும்!

சில நல்ல பழைய பாடல்களின் சரணங்கள் கீழே. பல்லவியை கண்டு பிடியுங்களேன்! (நாளை நானே சொல்கிறேன்!)

1. தெய்வத்தின் மார்பில் சூடிய மாலை தெருவினிலே விழலாமா?
2. முறையுடன் மணந்த கணவர் முன்னாலே பரம்பரை நாணம் தோன்றுமா?
3. நிறம் பார்த்து வெறுப்போர் முன் படைத்தாய் கண்ணா, நல்ல குணம் பார்க்க மறுப்போர் முன் படைத்தாய் கண்ணா!
4. என் மாடம் முழுதும் விளக்கு! எந்நாளும் இல்லை இருட்டு. என் உள்ளம் போட்ட கணக்கு, ஒரு போதும் இல்லை வழக்கு!
5. பூவுலகின் லட்சியங்கள் பூப்போன்றே வாழும்! தெய்வ சொர்க்க நிச்சயம் தான் திருமணமாய் கூடும்!
6. மெல்லிய பூங்கொடி வளைத்து, மலர் மேனியை கொஞ்சம் அணைத்து, இதழில் தேனைக் குடித்து,
7. கவிஞர் சொன்னதே கொஞ்சம், இனிமேல் காணப் போவதே மஞ்சம்!
8. தேன் கொண்டு வந்த முல்லை மொட்டு, பூஞ்சிட்டு, கண்ணல்ல ஓடி வா!
9. கரும்போ, கனியோ, கவிதைச் சுவையோ, விருந்தோர் கொடுத்தான், விழுந்தாள் மடியில்!
10. தண்ணீரில் ஆடும் செவ்வாழைக் கால்கள், பனி மேடை போடும் பால் வண்ண மேனி!

என் பழைய நினைவுகளிலிருந்து சிலவற்றை அவசரமாக பிய்த்து பதித்துள்ளேன். சொற்தவறுகள் இருந்தால் மன்னிக்கவும், திருத்தவும்!

என்றென்றும் அன்புடன்
பாலா

Monday, October 04, 2004

உடன் பயின்ற நண்பனுக்கு ஒரு மடல்!

நலம், நலமறிய அவா.

சென்ற வருடம், கிட்டத்தட்ட 17 ஆண்டுகளுக்குப் பின் நாம் படித்த GCT கல்லூரிக்கு பணி புரியும் நிறுவனத்திற்கு இளம் பொறியாளர்களை தேர்ந்தெடுக்கும் நிமித்தம் (Campus Recruitment) செல்ல நேர்ந்தது. கல்லூரி வளாகத்திற்குள் காலடி எடுத்து வைப்பதே ஒரு சுகானுபவமாகத் தோன்றியது!

கல்லூரி வளாகத்திற்குள் அமைந்திருக்கும் கூடைப்பந்தாட்டக் களம், கான்டீன், விளையாட்டரங்கம், Table Tennis ஆடிய, TV கண்டு களித்த Gymkana, உணவகங்கள் (mess), பாடம் பயின்ற வகுப்பறைகள், திரையரங்கம், வைகை, பவானி, காவேரி என்றழைக்கப்பட்ட தங்கும் விடுதிகள் ஆகியவற்றை மறுபடியும் தரிசித்தபோது, நாம் கல்லூரியில் பயின்ற கால கட்டத்தில் சந்தித்த பலவிதமான நிகழ்வுகள் குறித்த ஞாபகங்களும், உணர்வுகளும், பெரு வெள்ளம் போல் என் நெஞ்சில் மோதியது.

நாம் முதலாண்டின் போது தங்கியிருந்த விடுதி, தற்போது சிறைச்சாலைப் போல, முற்றும் இரும்பு வேலியால் (Ragging நடைபெறா வண்ணம்) சூழப்பட்டுள்ளது! அதற்கென தனியாக 24-மணி நேரக்காவலரும் நியமிக்கப் பட்டுள்ளனர். பொதுவாக, முதலாண்டு மாணவர்களைத் தவிர வேறு யாரும் அவ்விடுதியில் நுழைய அனுமதிக்காத காவலர், நான் பல வருடங்களுக்கு முன் அவ்விடுதியில் தங்கிப் படித்தவனென்பதையும், வந்த காரணத்தையும் கூறியவுடன், அவர், "உங்களுக்கில்லாத அனுமதியா? உரிமையா?" என்று நட்புடன் கூறி, உள்ளே செல்ல அனுமதித்தார்! நானும் 'சக அறையர்' பழநியும் வாழ்ந்த 116-இலக்க அறை, ஒரு பக்கம் சற்று உடைந்த கண்ணாடியுடன் கூடிய ஜன்னலுடனும், பழுப்பு வண்ணக் கதவுகளுடனும், அதே வாசனையுடனும் அப்போதிருந்த மாதிரியே தோன்றியது!!

நாம் ECE பயின்ற காலத்தில் இளம் விரிவுரையாளராக இருந்த 'LP Madam' இப்போது ECE துறைக்கு தலைவராக (தலைவியாக!) உள்ளார். அண்ணாதுரை அவர்கள் கணினி அறிவியல் துறைத் தலைவராக உயர்ந்துள்ளார். நம் கல்லூரி அலுவலகக் கட்டிடத்தின் முகப்பிடத்தில், அப்போதைய கல்லூரி முதல்வர் திரு.சாமுவேல் மற்றும் துணை முதல்வர் திரு.WGK அவர்களின் புகைப்படங்கள் புதிதாகத் தோன்றியிருந்தன. நாம் அடிக்கடி செல்லும் கல்லூரிக்கு அருகிலுள்ள விநாயகர் கோயிலுக்குச் சென்றபோது ஓர் ஆச்சரியம்! நாம் அன்று பார்த்த அதே அர்ச்சகர் இன்றும் இறை சேவை செய்து வருகிறார். அந்த பிள்ளையார் Semester தேர்வுகளில் போது நமக்கு எவ்வளவு உதவியிருக்கிறார் என்பதை நீ நன்றாக அறிவாய்!!!

முன்பிருந்தது போலவே, நமது கல்லூரியில் மாணவர்களை விட மாணவிகளின் எண்ணிக்கை இன்றும் அதிகமாகவே உள்ளது! நான் சந்தித்த மாணவப் பிரதிநிதிகள், மிக அடக்கமாகவும், எழுத்து மற்றும் நேர்முகத் தேர்வுகளை நடத்த மிக உதவியாகவும் இருந்தார்கள். அவர்களிடம் நானும் ஒரு GCTian என்று கூறியபோது, நாம் படித்த காலத்தைப் பற்றிய பலவித வினாக்களை எழுப்பி, பதில் வேண்டி என்னை திணறடித்து விட்டார்கள்!
அந்த ஒரு நாள் கல்லூரி விஜயத்தின் போது, என்னுள் ஒர் இன்பப் பிரவாகமாய் பொங்கியெழுந்த, நிகழ்வுகளின் நினைவுகளான,


1. ஏதோ ஒரு முக்கியமான கிரிக்கெட் ஆட்டத்தில், நமது ஷியாம் அனாயசமாக விளையாடி 100 ரன்களைக் குவித்தபோது, அவனுக்கு மாலையிட்டு நாம் அனைவரும் அவனை தோள் மீது சுமந்ததும்
2. நம்முடன் படித்த பாலாஜிக்கும் (குள்ளிபீஸ்!) மாதப்பாவுக்குமிடையே, ஓரு அழகிய மாலை வேளையில் செயற்கை ஓளியில் நடைபெற்ற ஓர் அற்புதமான பூப்பந்தாட்ட இறுதி ஆட்டமும்
3. காலஞ்சென்ற நம்முயிர் சிநேகிதன் ப்ரீதம், Mock Press என்றழைக்கப்படும் நிகழ்ச்சியில், சாத்தானாக தோன்றி நடித்து, வெளுத்துக் கட்டியதும்
4. AD-APT போட்டிகளில் வெளிப்பட்ட, 'நாரி' என்று அன்போடு அழைக்கப்பட்ட TS நாராயணனின் அபாரமான பேச்சுத்திறனும்
5. பல நீண்ட தூர ஓட்டப்பந்தயங்களில் சோர்வை காட்டாமல் ஓடி வென்ற நமது முருகதாஸிடம் இருந்த இறுதிச்சுற்று (Final Lap) நிபுணத்துவமும்
6. நமது நந்துவின் Table Tennis சாதனைகளும்
7. GRE, CAT, GATE என்று அனைத்துத் தேர்வுகளுக்கும், ஒரே சமயத்தில் படித்து, எல்லாவற்றிலும் மிக நல்ல மதிப்பெண்கள் பெற்ற தோழன் வசந்த்தின் அயராத உழைப்பும், சிறந்த கல்வியார்வமும்
8. கூடைப்பந்தாட்டக் களத்திலுள்ள இருக்கைகளில் அமர்ந்தபடி, அவ்வழியாகச் செல்லும் மாணவிகளை கண்களாலேயே விழுங்கிய 'ஜொள்' செந்தில் மற்றும் 'படூ' செல்வராஜின் இளமைக் குறும்புகளும்
9. GS-இன் தாங்க முடியாத 'கடி' ஜோக்குகளும்
10. கல்லூரி விழாக்களில் பல முறை ஒலித்த அசோக்கின் மயக்கும் குரல் வளமும்
11. கல்லூரியின் அழகு தேவதை ஆஷா ஜார்ஜ் பங்கு பெற்ற நீளம் தாண்டும் போட்டியும்
12. கல்லூரித் திரையரங்கில், ஓர் இரவுக்காட்சியின் நடுவே, படத்துக்கு சம்மந்தமில்லாத, 'தணிக்கை செய்யப்படாத' சில காட்சிகளைப் புகுத்திய குமரவேலின் அசாத்திய துணிச்சலும்
13. மூன்றாமாண்டு படித்தபோதே, இறுதியாண்டு மாணவரை பிரமிக்கத்தக்க வகையில் வென்று, Overall Sports Shield-ஐ கைப்பற்றியதும், அதன் தொடர்ச்சியாக நிகழ்ந்த இரவு நேரக் களியாட்டங்களும்
14. 'தலைவர்' என்று மரியாதையோடு (வேலையை விட்டு மறுபடி படிக்க வந்ததால்!) அழைக்கப்பட்ட சேகர், ஆரோக்கியம் வேண்டி, தினம் மாலையில், மைதானத்தைச் சுற்றி, வியர்க்க விறுவிறுக்க ஓடிய காட்சியும்
15. முதலாம் ஆண்டு படிக்கையில், மாலை/இரவு வேளைகளில் நமது அறைகளில் விளக்கெரிய 'தடா' போட்ட senior மாணவர்கள், விளக்கெரிவதைப் பார்த்து விட்டால், அமர்க்களமாகக் கல்லெறிந்து ஜன்னல் கண்ணாடிகளை உடைத்து, நம்மை கதி கலக்கியதும்

என் நெஞ்சை விட்டு என்றும் அகலா!!!

உன் உயிர்த் தோழன்
பாலா


Friday, October 01, 2004

கமல்ஹாசனின் சிங்கப்பூர் பேச்சு குறித்த ஓர் அலசல்


சமீபத்தில் சிங்கப்பூரில் நடந்த "அனைத்துலக அரங்கில் தமிழ்" என்ற மாநாட்டில் திருவாளர் கமல்ஹாசன், தன் பங்குக்கு தமிழ்நாட்டில் வாழும் தமிழர்களை கடுமையாக சாடியுள்ளார். அதாவது, தமிழ்நாட்டுத் தமிழர்கள் தமிழ்ப்பற்று அற்றவர்கள், ஆங்கில மோகத்தில் சீரழிபவர்கள் என்றெல்லாம்!

நல்ல திரைப்படங்கள் வாயிலாக கமல் ஓரளவு தமிழ்ச்சேவை செய்துள்ளார் என்றாலும் கூட, இவ்வாறு தாறுமாறாக தமிழ்நாட்டுத் தமிழர்களை கேவலமாகப் பேச தானாக உரிமை எடுத்துக் கொள்வதற்கு, அவர் ஓன்றும் பெரும் தமிழ்த் தொண்டாற்றிய மூதறிஞர் அல்லர்! என்னவோ சிங்கப்பூரில் வாழும் "இனிய" (கமல் கண்ணோட்டத்தில்!) தமிழர்கள் மத்தியில் வள்ளுவப் பெருந்தகையும், நக்கீரரும் உலவுவது போலவும், தமிழ்நாட்டில் என்னவோ "கசப்பான" ஆங்கிலேய ஆட்சி நடப்பது போலவும் பேசியிருப்பது மிகவும் வருத்தத்திற்குரியது. தமிழ்ப்பற்று மிக்க "இனிய" சிங்கப்பூரிலேயே தங்கிக் கொண்டு தமிழ்ப்படம் தயாரித்து வெளியிட்டு, அவர் மகிழ்ச்சியுடன் இருக்கட்டுமே!! யார் தடுத்தது?

உலகநாயகனின் பிரமிக்கத்தக்க வளர்ச்சியிலும், அன்னார் சிகரங்களைத் தொட துணையாக நின்றதிலும், தமிழ்நாட்டுத் தமிழர்களின் பங்களிப்பு சிங்கப்பூர் மற்றும் பிற இடங்களில் வாழும் தமிழர்களின் பங்களிப்பை விட அதிகம் என்பதை யாரும் மறுக்க இயலாது. கமல் அவர்களின் கணிப்பில் ஆங்கில மோகம் கொண்ட நாங்கள் தானே அவர் நடித்த படங்களை பல முறை (திரையரங்குகளில் தான்!) பார்த்து ரசிக்கிறோம். ஓன்று மட்டும் தெளிவாகப் புரிகிறது. தமிழ்நாட்டுத் தமிழன் சோற்றாலடித்த பிண்டம், அவனை யார் வேண்டுமானாலும், என்ன வேண்டுமானாலும் சொல்லலாம். அப்படியே, கமலுக்கு உண்மையான ஆதங்கம் இருந்தாலும் கூட, அதை இங்கு கூறுவதை விடுத்து வெளிநாடு சென்று சேற்றை வாரியிறைப்பது அழகல்ல.

நம் தமிழ் Bloggers-இல் பலர் Professionals-ஆக இருப்பதால், பணி நிமித்தம் கடுமையாக உழைக்க வேண்டியிருந்தாலும் கூட, வலைப்பதிவுகள் வாயிலாக உலகளாவிய வலையில் தமிழ் மொழியையும், தமிழார்வத்தையும் வளர்த்து வருகிறார்கள் என்பது இங்கே குறிப்பிட வேண்டிய ஒன்று.

அதே மாநாட்டில் நடந்த, கமல் பதில் அளித்த கேள்வியரங்கத்தில் ஒரு தமிழ்நாட்டுத் தமிழர் (வேலை நிமித்தம் சிங்கப்பூர் சென்றவர்) கமலிடம் அவர் ஏன் அவ்வாறு தங்களை இழித்துப் பேசினார் என வினவியதற்கு கமல் அவர்கள் " பின்னே என்ன, தமிழ்நாட்டுத் தமிழர்கள் தமிழை நேசிக்கிறார்கள், தமிழ் மொழியை காப்பாற்றுகிறார்கள், ஆங்கிலத்தை மதிப்பதில்லை என்றெல்லாம் பொய் சொல்லச் சொல்கிறீர்களா?" என்று பதில் வினாவெழுப்பினார். " ஐயா! நீங்கள் உண்மையும் கூற வேண்டாம். பொய்யும் பேச வேண்டாம்! உங்களைப் பற்றியும், தமிழ் சினிமாவைப் பற்றியும், தமிழ் மொழி பற்றியும் நிறைய பேசுங்கள்! எங்களை பழிக்காதீர்" என்று கூற விரும்புகிறேன்.

கமல் ஒட்டு மொத்த தமிழ்நாட்டுத் தமிழர்களின் மீதும் குற்றம் சாட்டுவதை விடுத்து அவர் சார்ந்த திரைப்படத் துறையாலும், அவர் அடிக்கடி தோன்றும் சின்னத்திரையாலும் தமிழுக்கு ஏற்படும் சீரழிவையும், பின்னடைவையும் பற்றி (மட்டும்) பேசியிருந்தால் அது நியாயமும் நேர்மையும் கூடிய பேச்சாக அமைந்திருக்கும்.

வெகு காலமாகவே, தமிழ்த் திரையுலகில், நடிகைகள் தமிழ் பேசத் தெரியாமல் இருப்பது, ஒரு முக்கியத் தகுதியாகவே கருதப்படுகிறது!?!?
"ஓடிப்போயி கல்யாணந் தான் கட்டிக்கலாமா?", "கட்டே, கட்டே, நீ நாட்டுக்கட்டே!", "மலே, மலே, மருதமலே!" போன்ற சமூக நோக்குடைய தமிழ் பாடல்களும், இட்லியில் பீர் (Beer) ஊற்றி சாப்பிடும் (சாமி!) புதுமையும், தமிழறியா வடநாட்டு இறக்குமதி நடிகைகளும், தமிழ்த் திரையுலகம் நமக்கு வழங்கிய கொடை அல்லவா!?!?!

தன்னைத் தானே தமிழ் மொழிக் காவலராக சிங்கப்பூரில் அறிவித்துக் கொண்டதின்(!) அடுத்த கட்டமாக, கமல் அவர்கள் தமிழ் மொழி வளர்ச்சிக்காக என்ன செய்ய திட்டமிட்டிருக்கிறார் என்பதை அவரது "வசூல் இல்லா" ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்!

என்றென்றும் அன்புடன்
பாலா

நன்றி நண்பரே !

வருகை தந்தமைக்கு நன்றி! உங்கள் மேலான கருத்துக்களை எதிர்பார்க்கிறேன்!
Related Posts with Thumbnails